Tuesday, February 07, 2012

மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.


தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றது இந்த பூமியில். இதைத்தான் இயற்கையின் சமநிலை (Nature Balance) என்று கூறுவர். நாம் இதை பற்றி சில சமயங்களில் கேள்வி பட்டிருப்போம், இதை இயற்கையின் சமநிலை என்ற போதிலும் இயற்கை எப்படி இப்படியான சமநிலையை கடைபிடிக்கும், எப்படி இந்த சமநிலையை தீர்மானிக்கிறது அரைகுறை இல்லாத ஏற்பாடுகள் எப்படி ஏற்பட்டன போன்ற கேள்விகள் தான் இறைவன் என்ற ஒரு ஒற்றை நிலையை எடுத்து வைக்கின்றது இந்த சமநிலையை தீர்மானிப்பதில் குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டுமல்லாமல் அதற்கு காரணமாக உயிரற்ற பொருள்கள் கூட அதாவது சூழ்நிலைகள் கூட முக்கியமான காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு அமைப்பை கொண்டுள்ளதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ்க்கை நடத்துகின்றன. 

இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.


இதேபோன்று கடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை உட்கொண்டு சிறுஉயிரிகள் வாழ்கின்றன, அந்த சிறுஉயிரிகளை உட்கொண்டு பெரிய மீன்கள் வாழ அவைகளை உட்கொண்டு திமின்கலம் போன்ற மிக பெரிய உயிரினங்கள் வாழ்கையை நடத்துகின்றன, இந்த உணவு சங்கிலிகள் மூலம் இயற்கை அதன் தன்மையை தக்க வைத்து கொள்வதுடன் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்த முடியும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு சங்கிலி மட்டுமல்லாமல் வேறு சில நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளை வைத்து கொண்டு இந்த பூமியை அழிவிலிருந்தும் காத்து சமநிலையையும் உண்டாக்குகின்றன.

இந்த சமநிலையை வேட்டை ஆடுதல், நோய், தட்ப வெப்ப நிலை போன்ற சில முக்கிய காரணிகளை கொண்டு பிரித்து அறியலாம், இந்த காரணிகளே உயிரினங்களின் உணவு சுழற்சிக்கு முக்கிய காரணம். உணவின் தேவையே ஒரு விலங்கை வேட்டையாட வைக்கிறது இதனால் ஒரு குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டும் இந்த பூமியில் வாழாமல் அனைத்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் வாழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் தட்ப வெப்ப நிலை மற்றும் நோய் போன்ற காரணங்களாலும் குறிப்பிட்ட உயிரினங்களின் இறப்பு ஏற்படுகிறது அதை அடிப்படையாக வைத்து மற்ற வகை உயிரினங்கள் தங்களது வாழ்கையை தொடர்கின்றன. 

இதேபோன்று பாதுகாப்பு யுக்திகளையும் எதிர்க்கும் சக்திகளையும் உயிரினங்கள் பெறாமல் இல்லை, வெவ்வேறு உருவங்களும் வடிவங்களும் கொண்ட உயிரினங்கள் தன்னை பாதுகாத்து கொள்ள ஒரே மாதிரியான எதிர்க்கும் சக்தியையும் கொண்டிருக்கவில்லை, வெவ்வேறு திறமைகளை கொண்டுள்ளன இது போன்ற மாற்று சக்தியை கொண்ட உயிரினங்களும் தன் இனத்திர்கேற்ப பாதுகாப்பு யுக்தியை பெற்ற உயிரினங்களும் இயற்கையை நிலைபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாற்று சக்தி அமைப்பு வைத்து கொண்டு மற்ற விலங்குகளிமிருந்து தன்னையும் தன் இனத்தையும் பாதுகாத்து கொள்கின்றன, இல்லையேல் மற்ற சக்தி மிகுந்த உயிரினம் அதன் இனத்தையே வேட்டை ஆடி விட கூடும். அது அவ்வினம் முழுமையாக அழிந்துவிடும் நிலைமைக்கு கூடதள்ளப்படும். 

ஒரே ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினங்கள் கூட ஒரு வகை தற்காப்பு ஆற்றலை பெற்றுள்ளது, அதன் தற்காப்பு ஆற்றல் அதற்கே தெரியாத அனிச்சை செயலாக இருக்கும் பொழுது அதற்கு அதன் செயல்பாடுகளே (தத்தமது பரிணாம வளர்ச்சியே) காரணம் என்று கூறுவது சரியானது அல்ல. இந்த நடுநிலை தன்மையை அனைத்து உயிரிங்களினாலும் பின்பற்றப்பட்டாலும் அது அவைகளுக்கு தெரிவதில்லை, உயிரினங்கள் பாதுகாப்பு யுக்தியை பெற்றிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் பல்கி பெருகி ஆபத்தை விளைவிக்காத அளவிற்கு கட்டுப்படுத்த படுகிறது. உதாரணமாக ஒரு பெண் கொசு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு (~) முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 (~) கொசுக்கலாக மாறுகிறது. இதே போன்று பிறக்க கூடிய அனைத்து கொசுக்களும் உற்பத்தியை செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த கொசுக்களால் பூமியே மூடப்படும். ஆனால் இதை செய்ய விடாமல் தடுப்பதற்கும் மற்ற வகை உயிரினங்களுக்கும் பாதுகாவலராக வருபவர்தான் சிலந்திகள்.

கொசுக்களை போன்று உள்ள லட்சகணக்கான பூச்சிகளை கொன்று தின்பவர் தான் இந்த சிலந்தி வகையை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒரு பெண் சிலந்தி தன்னுடைய வாழ் நாளில் 250 கொசுக்களையும் 33 பழ பூச்சிகளையும் கொன்று தின்கின்றதாம், இங்கு சரியான சமநிலையை பின்பற்ற உதவுவது தான் இந்த சிலந்திகளும் அதை சார்ந்த குழுக்களும்.  மேலும் சிறு பூச்சு வகைகளை பார்ப்போமானால் அவை அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன, இந்த பூச்சுக்கள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடுநிலை தடுமாறி விடுமாம்.அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடுமாம். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது. இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன, இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பறவை போன்ற மேல்மட்ட விலங்குகளே பூச்சி போன்ற இனத்தை சாப்பிடுகின்றன, ஆனால் பரிணாமத்தின் படி பூச்சி வகைகள் வந்த பிறகு தான் பறவை இனம் வந்தது, பூச்சிகளை சாப்பிட பறவைகள் இல்லாத நேரத்தில், பூச்சிகள் உலகில் உள்ள அனைத்து வகையான தாவரங்களை உண்டு மொத்த இனத்தையும் அழித்திருக்கும், அப்படியெனில் பரிணாமத்தின் படி தாவரத்தை உண்டு வாழும் மேல்மட்ட உயிரினங்கள் வருவதற்கு வாய்ப்புக்களே இருந்திருக்காது. ஆக அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு உலக அமைப்பு இருப்பதற்கு சாத்தியம்.

கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி (~) முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் (~) முட்டைகள் வரை இடும், etc. அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.


உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கேஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை கடவுள் உருவாக்கி உள்ளார், இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிய கூடிய ஆற்றல் பெற்றுள்ளது, இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் என்ன ஆகும், உயிரினங்கள் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.

இதே போன்று ஒவ்வொரு உயிரினமும் இயற்கையை சமநிலை படுத்த ஒவ்வொரு விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, அவை அனைத்தையும் கூறினால் அது ஆச்சர்யமானதாகவே இருக்கும். ஒரு இனம் மட்டும் வாழும் அளவிற்கு இந்த பூமி இருக்கவில்லை குறிப்பிட்ட இனத்திலிருந்து அனைத்தும் வந்திருந்தால் மற்ற உயிரினத்தை உணவிற்காக கூட அழித்திருக்கும் தற்போது இருப்பது போல அனைத்தும் வாழவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்காது இது போன்ற வித்தியாசமான நிர்ணயிக்கப்பட்ட முறைகளை காணும் எவரும் இவைகள் ஒவ்வொன்றாக தானாக வந்திருக்கும் என கூற வாய்ப்பில்லை, ஏனெனில் தன்னகத்தே சிக்கலான அமைப்பை பெற்றுள்ளதோடு ஒன்றில்லையே ஒன்றில்லை என பிற உயிரினங்களிலும் பிரிக்க முடியாத குழுவாக வாழ்கையை நடத்துகின்றன. 

மேலும் சொல்வோமானால் சிறு விலங்குகள் அதிக இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் பெரிய விலங்குகளோ சிறிய அளவிலான (சூழ்நிலையை பொருத்து) இனப்பெருக்கத்தை செய்கிறது. இயற்கையின் தன்மையை நிலை நாட்டுவதற்காக இனப்பெருக்கத்தையும் மாபெரும் சக்தி கட்டுபடுத்துகிறது.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்து ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும். (அதேநேரம் இரவில் தாவரங்கள் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும், இதன் காரணமாகவே இரவில் மரத்தின் அடியில் படுக்க வேண்டாம் என்பர்.)


மேலும் மனித உற்பத்தியை எடுத்து கொள்ளுங்கள், ஆண் பெண் இரண்டு வர்க்கத்தினரும் பிறக்கின்றனர், சராசரியாக சீர்படுத்த கூடிய அளவில் தான் பிறப்பு விகிதம் இருக்கிறது. ஆனால் ஆண் குழந்தை பிறப்பது வெகுவாக குறைந்தால் பெண்கள் திருமணமாகாமல் தவிப்பார், அதே பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் ஆண்கள் திருமணத்திற்கு பெண் இல்லாமல் திரிவர், ஆனால் நடைமுறையில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் (2011 census) என இந்தியாவில் பெண்களின் விகிதம் இருக்கிறது, சிசுக்கொலை அதிகமாக உள்ள நமது நாட்டில் இந்த நிலை மற்ற நாடுகளை கணக்கில் கொண்டால் தோராயமாக சமமாகவே அல்லது பெண்களின் விகிதம் சற்று அதிகரித்தோ இருக்கும். இருப்பினும் ஒரே அடியாக பெண்களின் எண்ணிக்கையோ ஆண்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்வதோ அல்லது குறைவதோ இல்லை, ஒரு சமநிலையை நிலை படுத்தி கொண்டே உள்ளது, ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனியானவர்களே எனும் போது இது போன்ற நிலைபாட்டை ஏற்படுத்துவது யார்? சிந்திக்க தெரிந்தவர்களுக்கு கடவுளை அறிய பச்சை மரத்தாணிபோல இது ஒன்றே போதும்.


இயற்கையான முறை என அனைத்திலும் உள்ளது அதை பயன்படுத்தும் காலமெல்லாம் நம்மால் இயற்கைக்கு ஆதரவான நடுநிலைபாட்டை ஏற்படுத்த முடியும், இதை அலட்சியபடுத்தும் போது அது இயற்கையாக அமையபெற்ற நடுநிலை தன்மையை சீர்குலைப்பதாக இருக்கும், அந்த நேரங்களில் அபாயகரமான விளைவுகளை நமது இனம் சந்திக்க நேரிடும். உதாரணமாக குளோபல் வார்மிங்கை ஏற்படுத்தும் க்லோரோ ப்லோரோ கார்பன், ஒரே இடத்தில் அடுக்கடுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களின் இயற்கைக்கு மாறன நிலைப்பாடு நிலநடுக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது. அனைத்தும் முறையாக வடிவமைக்கப்பட்ட பூமி நமது தவறுகளினால் சீர்குலைக்க படுகிறது, சீர்குலையாத பூமி என்ற நிலைக்கு அனைத்து வகை உயிரினங்களும் சூழ்நிலைகளும் அச்சாணி என்றிருக்க அவை ஒவ்வொன்றாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. 

இயற்கையாக இது போன்ற ஒரு நிலைத்தன்மை நிலவுவதற்கு இப்பூமியில் உள்ள அனைத்தின் செயல்பாடுகளும் அறிந்த நடுநிலைத்தன்மையை உருவாக்க கூடிய ஒரு சக்தியினால் மட்டுமே முடியும். இந்த சீரிய அமைப்பிலிருந்து உயிரினங்கள் குறிக்கோளுடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம். 

“மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 45:4) 

- கார்பன் கூட்டாளி 

Post Comment